Saturday, September 28, 2019

முதற் பிரதி நூலே (poem)


தலைப்பிள்ளையாய் நானும் - என் முதற் கரு நூலே
உன்னை என் மனதில் சுமந்தேன்.
மாதங்கள் பத்தல்ல - என் பிள்ளைப்பேறு 
வருடங்கள் பல கனவோடு - உன்னை
மன அறையில் நான் சுமந்தேன்.

பல இரவுகள் துயில் மறந்து
பல பொழுதுகள் ஊன் மறந்து
சிறிது சிறிதாக என் கன்னி படைப்பே
உன்னை நானும் முத்தெழுத்தால் வடித்தெடுத்தேன்.

அச்சகங்கள் பல அலை மோதினாலும்- ஏழைத்தாயிவள்
கையிருப்பு பார்த்து நானும் எட்டா தூரமதில் -உன்னை
அச்சுப்பதிக்க அனுப்பி வைத்தேன்.

படியிறங்கிய கன்னிபெண் கரைசேரும் வரை
வழி மேல் விழி வைத்த தாய் போல
என் முதற் பிரதி நூலே -உன்னை காண
பல நாட்கள் தவம் நான் கொண்டேன்.

பல கனவுகள் விழியோடு - பல இரவுகள் கனவோடு
என் கன்னி படைப்பே உன்னை வெளியிட
தினமொரு  கனவுகள் நான் கண்டேன் .

கனவெல்லாம் பொய்யாக ஏழைத்தாயின் மௌன
கதறலோடு நீயும் வீட்டிலேயே பிரசுரிக்கப்பட்டாய்
உன்னை கொண்டாட யாருமில்லை
திண்டாடினேன் இந்த ஏழைத்தாய் .

பலரின் சுய முகங்கள் உன் வரவில் நான் உணர்ந்தேன் .
சிலரின் சில்லறைதனம் உன் விற்பனையில் - நான் கண்டேன்.
பிச்சையாய் உன்னை விற்க நீ -எத்தீனின் மகவில்லை
ஈன்றெடுத்த தாய் வாக்கு பொய்யாக போவதில்லை

ஏறெடுத்து பார்க்காதவர் - எட்டி பார்க்க தேவையில்லை
ஈழம் ஒருநாள் உன் புகழ் பாடும்
எனக்கேதும் ஐயமில்லை.


No comments:

Post a Comment